மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய பஞ்சபூத லிங்கங்களின் வடிவில் சிவபெருமான் எழுந்தருளும் தலங்கள் முறையே, திருக்காஞ்சிபுரம், திருவானைக்கோவில், திருவண்ணாமலை, திருக்காளத்தி (சீகாளத்தி), சிதம்பரம்.
இறைவன்: காளத்தியப்பர், காளத்தீஸ்வரர்.
இறைவி: ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி.
பஞ்சபூதங்களில் காளத்தி, காற்றுத் தலம். தட்சிண கைலாயம் (தென் கயிலாயம்) என்ற சிறப்பு பெற்றது.கோபுரங்கள் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. மூலவரின் எதிரில் உள்ள இரு தீபங்கள் எப்போதும் காற்றால் உந்தப்பட்டதைப் போல் ஆடிக்கொண்டேயிருக்கும். காற்றுத் தலம் என்பதற்கான கண்முன் சான்று!காலசர்ப்ப தோஷம் உள்ளிட்ட பல்வேறு வினைகளைத் தீர்க்கும் திருத்தலம்.
திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி; இத்தலத்திற்குச் சென்றால் முக்தி.
தலவிருட்சம்: வில்வம்.
தீர்த்தம்: பொன்முகலி ஆறு.
பாடியவர்கள்: அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர். 1008 லிங்கங்களின் தரிசனம் அரிதானது.வெங்கடாஜலபதி, ப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் சன்னதிகளும் உண்டு!
சீ = சிலந்தி, காளத்தி = காளம் + அத்தி. இதில் காளம் என்பது பாம்பு, அத்தி என்பது யானை. மூன்று உயிர்களும் தங்கள் முன்வினைப் பாவம் நீங்கி முக்தியடைந்த தலம்.\n\nஇங்குள்ள லிங்கத்தை யாரும் தொடுவதில்லை! வாயுலிங்கம், தொட்டால் ஏதேனும் ஆபத்து நேரலாம் என்ற அச்சம்!
பக்தன் கண்ணப்பன்:
இறைவனிடம் தீவிர ஈடுபாடு இருந்தால் போதும். மற்ற சடங்குகளை மதிக்க வேண்டியதில்லை என்பதை அழுத்தமாக உணர்த்திய பக்தன். வேட்டையைத் தொழிலாகக் கொண்ட கண்ணப்பன், வில்வவனத்தில் வேட்டைக்குச் செல்லும்போது காளத்திநாதனைக் காண நேர்கிறது. ”கண்டதும், ஆஹா! தேவாதி தேவன் எத்தனை நாட்கள் உணவு கொள்ளாமல் இருக்கிறாரோ?” என வருந்தி வேட்டையில் கிடைக்கும் பச்சை மாமிசத்தையும், பொன்முகலி ஆற்று நீரையும் தனது வாயில் கொண்டுவந்து இறைவனுக்குப் படைத்துவருகிறான்.இவ்வாறு தினமும் நடப்பதை அறிந்த ஆலயத்தின் அர்ச்சகர் இறைவன் புலால் உண்பதை அறிந்து வேதனையுறுகிறார். கண்ணப்பனின் உண்மையான அன்புதழுவிய பக்தியை உலகம் அறிந்து கொள்ள விரும்பினார் சிவன். அர்ச்சகரிடம் நடக்கப் போவதை மறைந்திருந்து காணும்படிச் சொல்கிறார் சிவபெருமான்.
வழக்கம்போல் மாமிசம் படைக்கிறான் கண்ணப்பன். இறைவன் உண்டபிறகே உணவு கொள்வது அவன் வழக்கம்.என்ன இறைஞ்சியும் இறைவன் உண்ணவில்லை. உண்ணச்சொல்லிக் கெஞ்சுகையில், லிங்கத்தின் கண்ணில் நீர் வழிந்தது. பதறிய கண்ணப்பன், “சுவாமி! பதற வேண்டாம். தங்கள் கண்ணுக்கு நான் மருந்திடுகிறேன்” என்று பச்சிலை வைக்கிறான். இப்போது நீருக்குப் பதிலாக ரத்தம் வடிகிறது. அஞ்சிய கண்ணப்பன், “கண்ணுக்குக் கண்ணே மருந்து என்கிறீரா?” என்று தனது அம்பினால் தன் கண்ணைப் பெயர்த்து இறைவனின் கண்ணில் அழுந்த அப்புகிறான். இன்னும் சோதித்துப் பெருமை சேர்க்க விரும்பிய இறைவன், தனது மற்றொரு கண்ணில் ரத்தம் வடியச் செய்கிறார். தனது ஒரு கண்ணால் அதைக் கண்ட கண்ணப்பன், “இப்போது தக்க மருந்து கண்டுகொண்டேன். கண்ணுக்குக் கண். இதோ! எனது இன்னொரு கண்ணும் உனக்கு” என்று அடையாளத்துக்காகத் தனது வலதுகாலை ரத்தம்வழியும் கண்ணில் வைத்துக் கொண்டு, இரண்டாம் கண்ணையும் பெயர்த்துப் பூசுகிறான். “இனி நீ நன்றாகப் பார்க்கலாம். உன் பார்வையே என் பார்வை. உன் பார்வையால் என்னைக் காப்பாற்று” என்று அழுது தொழுகிறான். அர்ச்சகர் அதிர்கிறார்.
அப்போது பார்வதியுடன் பரமேஸ்வரன் தோன்றி “பேரன்பு கொண்ட பக்தனே! உன் பக்தியைப் பாராட்டி மகிழ்கிறேன். எனக்கு உன் கண்ணை வழங்கியதால் இனி நீ கண்ணப்பன் என்று அழைக்கப்படுவாய்” என்று அருள்வழங்கி மறைகிறார்கள். கண்ணப்பனின் இயற்பெயர் திண்ணன். அனைவருக்கும் தெரிந்த வரலாற்றை விவரமாகச் சொன்னதற்குக் காரணம் அந்த பக்தனின்மீது எனக்குள்ள அன்பை வெளிப்படுத்தவே! மேலோட்டமாகப் பார்த்தால் கண்ணப்பனின் செயல் முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் அவன், இறைவன்மீது கொண்ட அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லவே இல்லை. இறைவனும் இப்படிப்பட்ட மெய்யான அன்பையே விரும்புகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக