சிதம்பரம் (Chidambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 57,733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 28,445 ஆண்கள், 29,288 பெண்கள் ஆவார்கள்.சிதம்பரம் மக்களின் சராசரி கல்வியறிவு 88.58% ஆகும். சிதம்பரம் மக்கள் தொகையில் 11.97% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரலாறு:-
தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். சிதம்பரம், ஆலயநகர் என்றும் நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர், சிதம்பரம்.
சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில் அந்த ஊர் பேர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக மாறிவிட்டது.
திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.
ஆலயம்:-
சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கியக் கடவுளான சிவபெருமானின் நடராசர் ஆலயமும், வைணவர்களின் முக்கியக் கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் ஆலயமும் இந்த நகருக்கு பெருமை சேர்க்கிறது. மேலும் இங்கு தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால் இந்நகரம் ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக