Kums ads

புதன், 4 பிப்ரவரி, 2015

கூடல் அழகர் - மதுரை


இந்தியாவின் தலைசிறந்த நகரங்களுள் ஒன்றாகத் திகழ்வது மதுரை மாநகரம்! நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது கூடல் அழகர் பெருமாள் கோவில். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் உள்ளது ஆலயம்.

ஆறுகள் கூடும் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதும் மரபு நம்முடையது. வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடும் இடம் திரிவேணி சங்கமம்! இதைப் போன்று கிருதமாலா என்னும் நதி பூமாலையைப் போல மதுரையை சுற்றி ஓடி ஒன்று சேர்வதால் மதுரை, கூடல் நகராயிற்று! கூடல் அழகர் விரும்பி உறைவதால் திருக்கூடல் (Thirukudal) என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.

மூலவர் - கூடலழகர்(வடமொழியில் வ்யூக சுந்தர்ராஜன்) கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார் - மதுரவல்லி நாச்சியார். (வரகுணவல்லி, மதுரவல்லி என்ற பெயர்களும் உண்டு.)
பொய்கை - கிருதமாலா, ஹேமபுஷ்கரணி.
விமானம் - எண்கோண விமானம். (அஷ்டாங்க விமானம்.)
காட்சி கண்டவர்கள் - பெரியாழ்வார், வல்லபர், பிருகு.
பாடியவர்கள் - திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார்.
ஆலயத்தின் அமைப்பு:சுற்றுமதில்களுடன் கூடிய திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் இராஜகோபுரம் அமைந்திருக்கிறது. கோபுர வாயிலைக் கடந்ததும் உள்ள மணிமண்டபத்தின் நடுவில் கொடிமரம், பலிபீடம் உள்ளன. தென்புறம் மதுரவல்லித் தாயாரின் தனிக்கோயில்,  வடக்கே சக்கரத்தாழ்வார் கோயில் உள்ளது. எதிரில் கீழ்ப்புறம் ஹேமபுட்கரணி உள்ளது.

கருவறையில் மூலவர் கூடல் “அழகர்” திருமகள், பூமகள் உடனுறைய கம்பீரமும், பொலிவும் கலந்த அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.  அவருக்கு முன்பாக உற்சவர் சௌந்தரராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் காட்சி தருகிறார். தெற்கே உள்ள படிகளின் மேலேறி எண்கோண விமானத்தளத்துக்குச் செல்லலாம். விமானத்தின் அடிப்பகுதி கருங்கற்களாலும், மேற்பகுதி சுதையாலும் உருவாக்கப் பெற்றது. 

தளத்தின் முதல் மாடத்தில் சூரிய நாராயணப் பெருமாள் இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சிதருகிறார். அஷ்டாங்க விமானத்தின் மேல்மாடக் கருவறையில் தேவியர், வானவர் புடைசூழப் பள்ளி கொண்ட பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். 

கோயிலின் கீழ்ப்பகுதியில் மூலவரைச் சுற்றி அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தின் வடக்கில் ஆண்டாள் திருக்கோயிலும், பரமபத வாயிலும், கிழக்கில் மணவாள மாமுனிகள் சந்நிதியும் உள்ளது. அடுத்து நவக்கிரக மேடையும், பள்ளியறை சந்நிதியும் அமைந்திருக்கிறது. 

நான்கு யுகங்களாக இருக்கும் ஆலயம். எனவே, நெடிய வரலாறு கொண்ட கோயில் இது! கிரேதா யுகத்தில் பிரம்மனின் மைந்தன் திருமாலை சிலைவடிவில் வழிபட விரும்பினான். விஸ்வகர்மாவினால் ஆலயம் எண்கோண விமானத்தோடு அமைக்கப்படுகிறது.  இதே யுகத்தில்தான் சிவன் இத்தலத்தில் உமையவளை மணம்புரிந்தார். 

திரேதா யுகத்தில் பிருது என்ற மன்னன் பறக்கும் விமானத்தில் பல தலங்களை வழிபட்டு வருகிறான். இங்கு வரும்போது அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் அவனது விமானம் பறக்கவில்லை! இறங்கி எம்பெருமானைக் காண்கிறான். அவரது பேரழகில் பெரிதும் கவரப்பட்டு இங்கேயே தங்கி முக்தியடைகிறான். 

துவாபரயுகத்தில் அம்பரீசன் என்ற சிறந்த திருமால் பக்தன் இந்தப் பெருமாளை வழிபட்டு முக்தியடைந்தான்.

கலியுகத்தில் வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டு வருகிறான். அவனுக்குத் திடீரென ஒரு சந்தேகம்.  ”முக்தியளிக்கும் தெய்வம் எது?” தன் நாட்டைச் சேர்ந்த பல்வேறு மதத்தினரிடம் கேட்கிறான். பதில் கிட்டவில்லை! எனவே, தனது ஐயத்தைப் போக்குவோர்க்குப் பொற்கிழி பரிசு. ”யாருடைய மதம் முக்தியளிக்கும் என்று நிரூபிக்கப்படுகிறதோ, அப்போது பொற்கிழி தானாகவே அறுந்துவிழும்” என்று பறை அறைவிக்கிறான் மன்னன். கேள்வியுற்ற பல்வேறு மதத்தினர் அரசவையில் விவாதங்களில் ஈடுபடலாயினர். 

பாண்டியனின் அரசவைப் புரோகிதராக இருந்த செல்வநம்பியின் கனவில் தோன்றிய கூடலழகர் “திருவில்லிபுத்தூரில் இருக்கும் பெரியாழ்வாரை அழைக்கவும். அவர், பரம்பொருள் யார்?; முக்தியளிக்கும் மதம் எது? என்பதை நிறுவுவார்” என்று கூறி மறைகிறார். பெரியாழ்வார் அழைக்கப்படுகிறார்.  அவர், வேதம், இதிகாசம் மற்றும் புராணங்களிலிருந்து பல்வேறு தக்க சான்றுகளால் திருமாலே பரம்பொருள்; வைணவமே முக்தியளிக்கும் மதம் என்பதைத் ஐயமின்றி எடுத்துரைத்ததும் பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது!  பேராச்சிரியமுற்ற பாண்டிய மன்னன், ஆழ்வாரைப் பணிந்து போற்றி, யானை மீதேற்றிப் பின்தொடர்ந்து ஊர்வலமாய் அழைத்து வருகிறான். 

தன் பக்தனின் வெற்றி ஊர்வலத்தைக் காணவிரும்பிய கூடலழகர், தாயாரோடு கருடவாகனத்தில் விண்ணில் உலாவரத் தொடங்கினார். இதை கண்ட ஆழ்வார், ”பெருமாளே! கலியுகத்தில் நீ இவ்வாறு காட்சி தருவதால் உன் அழகுக்குக் கண்ணேறு பட்டுவிடாதோ?” என்று பல்லாண்டு பாடுகிறார் எம்பெருமானுக்கு! இங்கு விளைந்த பல்லாண்டுதான் அனைத்து திவ்ய தேசங்களிலும் பெருமாளுக்குத் திருப்பல்லாண்டாக, முதலில் பாடும் பாடலாக அமைந்துவிட்டது!


தலத்தின் சிறப்புகள்! பெருமாள் கோவில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். அதில் எண்கோண விமானம் சிறப்பு வாய்ந்தது. 108 திருப்பதிகளில் இங்கும், திருக்கோட்டியூரிலும் மட்டுமே பெருமாள் அஷ்டாங்க விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார்!

இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதன் கலசம், 10 அடி. இதன் நிழல் தரையில் விழுவதில்லை! மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம், ”ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்!

பெருமாள் உலகளந்த அவதாரம் எடுக்கும்போது அவரது திருப்பாதம் பிரம்மனின் சத்தியலோகம் வரை நீண்டது. அக்கமல பாதங்களைப் பிரம்மன் தன் கமண்டல நீரால் சுத்தப்படுத்த, அதிலிருந்து தெறித்த துளிகள் பல்வேறு தலங்களில் பல நதிகளாய் மாறின. இங்கு வையத்தில் வீழ்ந்து புனிதமானதால் வையை (வைகை) ஆனது. வைகை இருகூறுகளாகப் பிரிந்து (வையை, கிருதமால்) மதுரைக்கு மாலை போல் ஆயிற்று!

சத்தியவிரதன் என்னும் பாண்டிய மன்னன் கூடலழகரின்மீது அளவற்ற பக்தி கொண்டவன். ஒருநாள் தன் முன்னோர்களுக்கு ஈமக்கிரியை புரிகையில் நீரில் மீனுருவமாய் (மத்ஸ்யம்) வந்த திருமால் அவனுக்கு அருமறைப் பொருளை உபதேசித்தார். எனவேதான், பாண்டிய மன்னர்கள் திருமாலிடம் பெரும் பக்திபூண்டது மட்டுமின்றித் தமது கொடிகளிலும் மீன் உருவத்தையே சின்னமாகப் பொறித்தார்கள்!

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்குப் பல்வேறு திருவிழாக்கள் எடுத்து மகிழ்ந்தான்.

”துவரைக் கோமான்” என்ற பெயரில் கூடலழகரே சங்கப்புலவராக வீற்றிருந்தார். சங்க காலத்தில் இப்பெருமாளுக்கு “இருந்த வளமுடையார்” என்ற திருப்பெயர். சிலப்பதிகாரம் இப்பெருமாளை “நெடுநீர் வையைப் பெருமாள்” என்கிறது.

இங்குள்ள உற்சவர் வியூக சுநத்ர்ராஜன் வெற்றி தரும் பெருமாள். இங்கு ஆண்ட பாண்டிய மன்னர்கள் போருக்குப் புறப்படும் முன்பு இவரை வணங்கித் தங்கள் வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டதாலும் இவருக்கு இந்தப் பெயர்! 

இராமானுஜரால் பெரிதும் உவந்து புகழப்பெற்ற தலம். பல்லாண்டு பாடப்பெற்றதால் இத்தலத்தை பரமபதத்துக்கு நிகராகக் கருதினார். 

”பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில் பெருமாள் மாடிவீட்டில் குடியிருக்கிறார்” என்ற சொல்வழக்குக்கு ஏற்ப இத்தலம் 3 தளங்களால் ஆனது. 

ஒருமுறை பூமியெங்கும் இடைவிடாத பெருமழை. பக்தர்கள் இறைவனை வேண்டுகிறார்கள். பெருமாள் நான்கு மேகங்களை ஏவுகிறார். அவை நான்கு மாடங்களாக நின்று மழையைத் தடுத்தன. எனவே, மதுரைக்கு நான்மாடக் கூடல் என்ற பெயர் ஏற்பட்டது.

பொதுவாகப் பெருமாள் கோவில்களில் நவக்கிரகத்துக்குத் தனியாக சன்னதிகளோ, சிலைகளோ இருக்காது. 108 திருப்பதிகளில் நவக்கிரக சிலைகள் அமைந்திருப்பது இங்கு மட்டுமே!

பெரியாழ்வார் வென்ற சபை இருந்த இடத்தை ”மெய்காட்டும் பொட்டல்” என்பார்கள்.  மருவி மேங்காட்டுப் பொட்டல் ஆயிற்று. இன்றும் மார்கழி மாதம் பகல்பத்துத் திருவிழாவின் முதல்நாளில் கூடலழகர் மேங்காட்டுப் பொட்டலுக்கு எழுந்தருள்கிறார். 

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் இத்திருத்தலத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பதைக் கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கிறது. 

ஸ்ரீரங்கத்தைப் போல இத்தலமும் இரண்டு நதிகளுக்கு இடைப்பட்டது.  அரங்கம், காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில். திருக்கூடல் வைகைக்கும், கிருதமாலாவுக்கும் இடையில்!

கோவிலின் உள்சுற்றில் 108 திவ்ய தேச எம்பெருமான்கள் அந்தந்தத் தலங்களில் எவ்வாறு எழுந்தருளியுள்ளனரோ அப்படியே தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் மிகவும் எழிலானவை.



ஸ்ரீ காளஹஸ்தி


மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய பஞ்சபூத லிங்கங்களின் வடிவில் சிவபெருமான் எழுந்தருளும் தலங்கள் முறையே, திருக்காஞ்சிபுரம், திருவானைக்கோவில், திருவண்ணாமலை, திருக்காளத்தி (சீகாளத்தி), சிதம்பரம்.

இறைவன்: காளத்தியப்பர், காளத்தீஸ்வரர். 
இறைவி: ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி.

பஞ்சபூதங்களில் காளத்தி, காற்றுத் தலம். தட்சிண கைலாயம் (தென் கயிலாயம்) என்ற சிறப்பு பெற்றது.கோபுரங்கள் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. மூலவரின் எதிரில் உள்ள இரு தீபங்கள் எப்போதும் காற்றால் உந்தப்பட்டதைப் போல் ஆடிக்கொண்டேயிருக்கும். காற்றுத் தலம் என்பதற்கான கண்முன் சான்று!காலசர்ப்ப தோஷம் உள்ளிட்ட பல்வேறு வினைகளைத் தீர்க்கும் திருத்தலம்.
திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி; இத்தலத்திற்குச் சென்றால் முக்தி. 

தலவிருட்சம்: வில்வம். 
தீர்த்தம்: பொன்முகலி ஆறு.
பாடியவர்கள்: அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர். 1008 லிங்கங்களின் தரிசனம் அரிதானது.வெங்கடாஜலபதி, ப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் சன்னதிகளும் உண்டு!

சீ = சிலந்தி, காளத்தி = காளம் + அத்தி. இதில் காளம் என்பது பாம்பு, அத்தி என்பது யானை. மூன்று உயிர்களும் தங்கள் முன்வினைப் பாவம் நீங்கி முக்தியடைந்த தலம்.\n\nஇங்குள்ள லிங்கத்தை யாரும் தொடுவதில்லை! வாயுலிங்கம், தொட்டால் ஏதேனும் ஆபத்து நேரலாம் என்ற அச்சம்!


பக்தன் கண்ணப்பன்: 

இறைவனிடம் தீவிர ஈடுபாடு இருந்தால் போதும். மற்ற சடங்குகளை மதிக்க வேண்டியதில்லை என்பதை அழுத்தமாக உணர்த்திய பக்தன். வேட்டையைத் தொழிலாகக் கொண்ட கண்ணப்பன், வில்வவனத்தில் வேட்டைக்குச் செல்லும்போது காளத்திநாதனைக் காண நேர்கிறது. ”கண்டதும், ஆஹா! தேவாதி தேவன் எத்தனை நாட்கள் உணவு கொள்ளாமல் இருக்கிறாரோ?” என வருந்தி வேட்டையில் கிடைக்கும் பச்சை மாமிசத்தையும், பொன்முகலி ஆற்று நீரையும் தனது வாயில் கொண்டுவந்து இறைவனுக்குப் படைத்துவருகிறான்.இவ்வாறு தினமும் நடப்பதை அறிந்த ஆலயத்தின் அர்ச்சகர் இறைவன் புலால் உண்பதை அறிந்து வேதனையுறுகிறார். கண்ணப்பனின் உண்மையான அன்புதழுவிய பக்தியை உலகம் அறிந்து கொள்ள விரும்பினார் சிவன். அர்ச்சகரிடம் நடக்கப் போவதை மறைந்திருந்து காணும்படிச் சொல்கிறார் சிவபெருமான். 

வழக்கம்போல் மாமிசம் படைக்கிறான் கண்ணப்பன். இறைவன் உண்டபிறகே உணவு கொள்வது அவன் வழக்கம்.என்ன இறைஞ்சியும் இறைவன் உண்ணவில்லை. உண்ணச்சொல்லிக் கெஞ்சுகையில், லிங்கத்தின் கண்ணில் நீர் வழிந்தது. பதறிய கண்ணப்பன், “சுவாமி! பதற வேண்டாம். தங்கள் கண்ணுக்கு நான் மருந்திடுகிறேன்” என்று பச்சிலை வைக்கிறான். இப்போது நீருக்குப் பதிலாக ரத்தம் வடிகிறது. அஞ்சிய கண்ணப்பன், “கண்ணுக்குக் கண்ணே மருந்து என்கிறீரா?” என்று தனது அம்பினால் தன் கண்ணைப் பெயர்த்து இறைவனின் கண்ணில் அழுந்த அப்புகிறான். இன்னும் சோதித்துப் பெருமை சேர்க்க விரும்பிய இறைவன், தனது மற்றொரு கண்ணில் ரத்தம் வடியச் செய்கிறார். தனது ஒரு கண்ணால் அதைக் கண்ட கண்ணப்பன், “இப்போது தக்க மருந்து கண்டுகொண்டேன். கண்ணுக்குக் கண். இதோ! எனது இன்னொரு கண்ணும் உனக்கு” என்று அடையாளத்துக்காகத் தனது வலதுகாலை ரத்தம்வழியும் கண்ணில் வைத்துக் கொண்டு, இரண்டாம் கண்ணையும் பெயர்த்துப் பூசுகிறான். “இனி நீ நன்றாகப் பார்க்கலாம். உன் பார்வையே என் பார்வை. உன் பார்வையால் என்னைக் காப்பாற்று” என்று அழுது தொழுகிறான். அர்ச்சகர் அதிர்கிறார்.

அப்போது பார்வதியுடன் பரமேஸ்வரன் தோன்றி “பேரன்பு கொண்ட பக்தனே! உன் பக்தியைப் பாராட்டி மகிழ்கிறேன். எனக்கு உன் கண்ணை வழங்கியதால் இனி நீ கண்ணப்பன் என்று அழைக்கப்படுவாய்” என்று அருள்வழங்கி மறைகிறார்கள். கண்ணப்பனின் இயற்பெயர் திண்ணன். அனைவருக்கும் தெரிந்த வரலாற்றை விவரமாகச் சொன்னதற்குக் காரணம் அந்த பக்தனின்மீது எனக்குள்ள அன்பை வெளிப்படுத்தவே! மேலோட்டமாகப் பார்த்தால் கண்ணப்பனின் செயல் முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் அவன், இறைவன்மீது கொண்ட அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லவே இல்லை. இறைவனும் இப்படிப்பட்ட மெய்யான அன்பையே விரும்புகிறான்.


சிதம்பரம் (நகரம்)

சிதம்பரம் (Chidambaramஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 57,733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 28,445 ஆண்கள், 29,288 பெண்கள் ஆவார்கள்.சிதம்பரம் மக்களின் சராசரி கல்வியறிவு 88.58% ஆகும். சிதம்பரம் மக்கள் தொகையில் 11.97% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு:-
தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். சிதம்பரம், ஆலயநகர் என்றும் நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர், சிதம்பரம்.
சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில் அந்த ஊர் பேர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக மாறிவிட்டது. 
திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.

ஆலயம்:-
சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கியக் கடவுளான சிவபெருமானின் நடராசர் ஆலயமும், வைணவர்களின் முக்கியக் கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் ஆலயமும் இந்த நகருக்கு பெருமை சேர்க்கிறது. மேலும் இங்கு தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால் இந்நகரம் ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.