இந்தியாவின் தலைசிறந்த நகரங்களுள் ஒன்றாகத் திகழ்வது மதுரை மாநகரம்! நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது கூடல் அழகர் பெருமாள் கோவில். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் உள்ளது ஆலயம்.
ஆறுகள் கூடும் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதும் மரபு நம்முடையது. வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடும் இடம் திரிவேணி சங்கமம்! இதைப் போன்று கிருதமாலா என்னும் நதி பூமாலையைப் போல மதுரையை சுற்றி ஓடி ஒன்று சேர்வதால் மதுரை, கூடல் நகராயிற்று! கூடல் அழகர் விரும்பி உறைவதால் திருக்கூடல் (Thirukudal) என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.
மூலவர் - கூடலழகர்(வடமொழியில் வ்யூக சுந்தர்ராஜன்) கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார் - மதுரவல்லி நாச்சியார். (வரகுணவல்லி, மதுரவல்லி என்ற பெயர்களும் உண்டு.)
பொய்கை - கிருதமாலா, ஹேமபுஷ்கரணி.
விமானம் - எண்கோண விமானம். (அஷ்டாங்க விமானம்.)
காட்சி கண்டவர்கள் - பெரியாழ்வார், வல்லபர், பிருகு.
பாடியவர்கள் - திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார்.
ஆலயத்தின் அமைப்பு:சுற்றுமதில்களுடன் கூடிய திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் இராஜகோபுரம் அமைந்திருக்கிறது. கோபுர வாயிலைக் கடந்ததும் உள்ள மணிமண்டபத்தின் நடுவில் கொடிமரம், பலிபீடம் உள்ளன. தென்புறம் மதுரவல்லித் தாயாரின் தனிக்கோயில், வடக்கே சக்கரத்தாழ்வார் கோயில் உள்ளது. எதிரில் கீழ்ப்புறம் ஹேமபுட்கரணி உள்ளது.
கருவறையில் மூலவர் கூடல் “அழகர்” திருமகள், பூமகள் உடனுறைய கம்பீரமும், பொலிவும் கலந்த அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அவருக்கு முன்பாக உற்சவர் சௌந்தரராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் காட்சி தருகிறார். தெற்கே உள்ள படிகளின் மேலேறி எண்கோண விமானத்தளத்துக்குச் செல்லலாம். விமானத்தின் அடிப்பகுதி கருங்கற்களாலும், மேற்பகுதி சுதையாலும் உருவாக்கப் பெற்றது.
தளத்தின் முதல் மாடத்தில் சூரிய நாராயணப் பெருமாள் இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சிதருகிறார். அஷ்டாங்க விமானத்தின் மேல்மாடக் கருவறையில் தேவியர், வானவர் புடைசூழப் பள்ளி கொண்ட பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கோயிலின் கீழ்ப்பகுதியில் மூலவரைச் சுற்றி அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தின் வடக்கில் ஆண்டாள் திருக்கோயிலும், பரமபத வாயிலும், கிழக்கில் மணவாள மாமுனிகள் சந்நிதியும் உள்ளது. அடுத்து நவக்கிரக மேடையும், பள்ளியறை சந்நிதியும் அமைந்திருக்கிறது.
நான்கு யுகங்களாக இருக்கும் ஆலயம். எனவே, நெடிய வரலாறு கொண்ட கோயில் இது! கிரேதா யுகத்தில் பிரம்மனின் மைந்தன் திருமாலை சிலைவடிவில் வழிபட விரும்பினான். விஸ்வகர்மாவினால் ஆலயம் எண்கோண விமானத்தோடு அமைக்கப்படுகிறது. இதே யுகத்தில்தான் சிவன் இத்தலத்தில் உமையவளை மணம்புரிந்தார்.
திரேதா யுகத்தில் பிருது என்ற மன்னன் பறக்கும் விமானத்தில் பல தலங்களை வழிபட்டு வருகிறான். இங்கு வரும்போது அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் அவனது விமானம் பறக்கவில்லை! இறங்கி எம்பெருமானைக் காண்கிறான். அவரது பேரழகில் பெரிதும் கவரப்பட்டு இங்கேயே தங்கி முக்தியடைகிறான்.
துவாபரயுகத்தில் அம்பரீசன் என்ற சிறந்த திருமால் பக்தன் இந்தப் பெருமாளை வழிபட்டு முக்தியடைந்தான்.
கலியுகத்தில் வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டு வருகிறான். அவனுக்குத் திடீரென ஒரு சந்தேகம். ”முக்தியளிக்கும் தெய்வம் எது?” தன் நாட்டைச் சேர்ந்த பல்வேறு மதத்தினரிடம் கேட்கிறான். பதில் கிட்டவில்லை! எனவே, தனது ஐயத்தைப் போக்குவோர்க்குப் பொற்கிழி பரிசு. ”யாருடைய மதம் முக்தியளிக்கும் என்று நிரூபிக்கப்படுகிறதோ, அப்போது பொற்கிழி தானாகவே அறுந்துவிழும்” என்று பறை அறைவிக்கிறான் மன்னன். கேள்வியுற்ற பல்வேறு மதத்தினர் அரசவையில் விவாதங்களில் ஈடுபடலாயினர்.
பாண்டியனின் அரசவைப் புரோகிதராக இருந்த செல்வநம்பியின் கனவில் தோன்றிய கூடலழகர் “திருவில்லிபுத்தூரில் இருக்கும் பெரியாழ்வாரை அழைக்கவும். அவர், பரம்பொருள் யார்?; முக்தியளிக்கும் மதம் எது? என்பதை நிறுவுவார்” என்று கூறி மறைகிறார். பெரியாழ்வார் அழைக்கப்படுகிறார். அவர், வேதம், இதிகாசம் மற்றும் புராணங்களிலிருந்து பல்வேறு தக்க சான்றுகளால் திருமாலே பரம்பொருள்; வைணவமே முக்தியளிக்கும் மதம் என்பதைத் ஐயமின்றி எடுத்துரைத்ததும் பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது! பேராச்சிரியமுற்ற பாண்டிய மன்னன், ஆழ்வாரைப் பணிந்து போற்றி, யானை மீதேற்றிப் பின்தொடர்ந்து ஊர்வலமாய் அழைத்து வருகிறான்.
தன் பக்தனின் வெற்றி ஊர்வலத்தைக் காணவிரும்பிய கூடலழகர், தாயாரோடு கருடவாகனத்தில் விண்ணில் உலாவரத் தொடங்கினார். இதை கண்ட ஆழ்வார், ”பெருமாளே! கலியுகத்தில் நீ இவ்வாறு காட்சி தருவதால் உன் அழகுக்குக் கண்ணேறு பட்டுவிடாதோ?” என்று பல்லாண்டு பாடுகிறார் எம்பெருமானுக்கு! இங்கு விளைந்த பல்லாண்டுதான் அனைத்து திவ்ய தேசங்களிலும் பெருமாளுக்குத் திருப்பல்லாண்டாக, முதலில் பாடும் பாடலாக அமைந்துவிட்டது!
தலத்தின் சிறப்புகள்! பெருமாள் கோவில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். அதில் எண்கோண விமானம் சிறப்பு வாய்ந்தது. 108 திருப்பதிகளில் இங்கும், திருக்கோட்டியூரிலும் மட்டுமே பெருமாள் அஷ்டாங்க விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார்!
இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதன் கலசம், 10 அடி. இதன் நிழல் தரையில் விழுவதில்லை! மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம், ”ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்!
பெருமாள் உலகளந்த அவதாரம் எடுக்கும்போது அவரது திருப்பாதம் பிரம்மனின் சத்தியலோகம் வரை நீண்டது. அக்கமல பாதங்களைப் பிரம்மன் தன் கமண்டல நீரால் சுத்தப்படுத்த, அதிலிருந்து தெறித்த துளிகள் பல்வேறு தலங்களில் பல நதிகளாய் மாறின. இங்கு வையத்தில் வீழ்ந்து புனிதமானதால் வையை (வைகை) ஆனது. வைகை இருகூறுகளாகப் பிரிந்து (வையை, கிருதமால்) மதுரைக்கு மாலை போல் ஆயிற்று!
சத்தியவிரதன் என்னும் பாண்டிய மன்னன் கூடலழகரின்மீது அளவற்ற பக்தி கொண்டவன். ஒருநாள் தன் முன்னோர்களுக்கு ஈமக்கிரியை புரிகையில் நீரில் மீனுருவமாய் (மத்ஸ்யம்) வந்த திருமால் அவனுக்கு அருமறைப் பொருளை உபதேசித்தார். எனவேதான், பாண்டிய மன்னர்கள் திருமாலிடம் பெரும் பக்திபூண்டது மட்டுமின்றித் தமது கொடிகளிலும் மீன் உருவத்தையே சின்னமாகப் பொறித்தார்கள்!
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்குப் பல்வேறு திருவிழாக்கள் எடுத்து மகிழ்ந்தான்.
”துவரைக் கோமான்” என்ற பெயரில் கூடலழகரே சங்கப்புலவராக வீற்றிருந்தார். சங்க காலத்தில் இப்பெருமாளுக்கு “இருந்த வளமுடையார்” என்ற திருப்பெயர். சிலப்பதிகாரம் இப்பெருமாளை “நெடுநீர் வையைப் பெருமாள்” என்கிறது.
இங்குள்ள உற்சவர் வியூக சுநத்ர்ராஜன் வெற்றி தரும் பெருமாள். இங்கு ஆண்ட பாண்டிய மன்னர்கள் போருக்குப் புறப்படும் முன்பு இவரை வணங்கித் தங்கள் வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டதாலும் இவருக்கு இந்தப் பெயர்!
இராமானுஜரால் பெரிதும் உவந்து புகழப்பெற்ற தலம். பல்லாண்டு பாடப்பெற்றதால் இத்தலத்தை பரமபதத்துக்கு நிகராகக் கருதினார்.
”பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில் பெருமாள் மாடிவீட்டில் குடியிருக்கிறார்” என்ற சொல்வழக்குக்கு ஏற்ப இத்தலம் 3 தளங்களால் ஆனது.
ஒருமுறை பூமியெங்கும் இடைவிடாத பெருமழை. பக்தர்கள் இறைவனை வேண்டுகிறார்கள். பெருமாள் நான்கு மேகங்களை ஏவுகிறார். அவை நான்கு மாடங்களாக நின்று மழையைத் தடுத்தன. எனவே, மதுரைக்கு நான்மாடக் கூடல் என்ற பெயர் ஏற்பட்டது.
பொதுவாகப் பெருமாள் கோவில்களில் நவக்கிரகத்துக்குத் தனியாக சன்னதிகளோ, சிலைகளோ இருக்காது. 108 திருப்பதிகளில் நவக்கிரக சிலைகள் அமைந்திருப்பது இங்கு மட்டுமே!
பெரியாழ்வார் வென்ற சபை இருந்த இடத்தை ”மெய்காட்டும் பொட்டல்” என்பார்கள். மருவி மேங்காட்டுப் பொட்டல் ஆயிற்று. இன்றும் மார்கழி மாதம் பகல்பத்துத் திருவிழாவின் முதல்நாளில் கூடலழகர் மேங்காட்டுப் பொட்டலுக்கு எழுந்தருள்கிறார்.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் இத்திருத்தலத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பதைக் கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கிறது.
ஸ்ரீரங்கத்தைப் போல இத்தலமும் இரண்டு நதிகளுக்கு இடைப்பட்டது. அரங்கம், காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில். திருக்கூடல் வைகைக்கும், கிருதமாலாவுக்கும் இடையில்!
கோவிலின் உள்சுற்றில் 108 திவ்ய தேச எம்பெருமான்கள் அந்தந்தத் தலங்களில் எவ்வாறு எழுந்தருளியுள்ளனரோ அப்படியே தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் மிகவும் எழிலானவை.